Dec 23, 2025

அசரீரி

ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்!

மொழியறியும் வரை உரக்க உரைத்து,
சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும்
ஒரு பேராற்றல்!

மொழி மறந்து உரையாடினால்,
ஓடி வந்து உறவாடும்
பச்சிளம் பிள்ளை!

முடிவெடுக்கும் முன்பே,
முழு விளைவையும்
உணர்த்தவல்ல வல்லபி!

பிற்காலம் பொற்காலம்
என்ற காலக்கோடுகளை
கடந்து வாழும் காளி தேவி!

அக குரல் கேட்டு நடந்தால்,
உணர்வை தூண்டும் விசைகளை
முறியடிக்கும் மூலஸ்த்ரி!

குழப்பம் வருத்தம் சஞ்சலம்
எதையும் அண்டவிடாது, தானே
பொறுப்பேற்கும் பொன்னி அவள்!

கண்ணும் காதும், நாக்கும் மூக்கும்,
உடலும் எண்ணமும், ஓங்கியிருக்க..
கூனி குறுகும் வாலை குமரி!

ஐம்புலனும் ஒடுங்கி, மனம் உறைந்தால்,
விழித்தெழுந்து வழிகாட்டும்
குமர குரு!

தவமுறை தியானமோ, குருவருளோ,
தெய்வ கடாட்சமோ சித்தித்தால்,
உன்னுடன் மட்டும் உரையாடும் அசரீரி!
Posted on by Hari

Sep 9, 2025

கருத்துணர்வு

என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்..
என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்..
போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தளம்!

ஆசை-அறிவு, பெற்றோர்-பிள்ளை, கணவன்-மனைவி, ஆசான்-கற்பவன்..
போன்ற அனைத்துறவின் முரண்களும்,
கருத்தும் உணர்வும் மோதும் முஷ்டி சண்டையே!

பெருமூளையில் நிலைகொண்டப் பெரியோர்கள்,
சிறுமூலையில் சிக்கியுள்ள சிறியோர்களை,
பொறுத்து பேணுவதே உத்தமம்!

உணர்வு முறியம்வரை.. கருத்தை தவிர்தலும்,
அறிவு விரியும்வரை.. கருத்தை மறைத்தலும்,
அன்பு பெருகினால்.. கருத்தை கைவிடுதலும்,
முதிர்ச்சி!
Posted on by Hari

இல்லம்

உலகில் கள்ளமும் கபடமும் மாச்சரியம் பழகி,
அதிலிருந்து ஓய்வு எடுக்க உறையும் இடமே இல்லம்!

தன்னந்தனியே இருக்கையில், இருக்கும் மனநிலையை,
இமியளவும் மாற்றாத சூழலே இல்லம்!

சோம்பலும் சோகமும் காமமும் கோபமும் ஒளிவின்றி,
தோன்றியதும் வெளிப்பட உகந்த இடமே இல்லம்!

உன்னில் உள்ளதை உள்ளபடியே உலகம் ஏற்றுக்கொள்ளாது.
ஏற்றுக்கொண்ட ஜீவன்கள் மட்டுமே கூடி வாழுமிடம் இல்லம்!
Posted on by Hari

அந்தக்கரணம்

மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு.
சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்..

விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்..
உணர்வு மேலோங்கினால் சுயமும்..
உணர்வற்ற நிலையில் புத்தியும்..
சுயநினைவற்ற உறக்கத்தில் சித்தமும்..

மாறி மாறி மேலோங்கி சுழற்றும்
நிலையே மனநிலை!

விழிப்புணர்வு கவனம் கிரஹிப்பு
மனத்தின் செயற்பாடு.. பிசகினால்..
மருட்சி மயக்கம் மந்த-புத்தி வெளிப்படும்.
சுட்டி தனமும்.. மதிக்கூர்மையும்.. நன்மனத்தின் அறிகுறி.

பொறுப்புணர்வு தன்னம்பிக்கை சுயமதிப்பு
சுயத்தின் செயல்.. அஹங்காரம் மிகுந்தால்..
அகந்தை கர்வம் தற்பெருமை தலைத் தூக்கும்.
ஆணவமும் தேவை.. முனைப்போடு செயல்பட!

ஆராய்தல் ஒப்பீடு மனத்திண்மை
புத்தியின் வெகுமதி. புத்தி கசிந்தால்..
அதீத-சிந்தனை வியாகுலம் குழப்பம் சூழும்.
நுழைபுல புத்தியை.. கட்டுக்குள் அடக்கியவன் புத்தன்.

சித்தத்தின் செயல்பாடு ஆழமானது
கிரஹித்ததை பதித்தலும், உள்ளுணர்வின் ஊற்றும்
சித்தம் செய்யும் செயலே!
மனம் சுயம் புத்தி உள்ளடக்கி, சித்தத்தில் உறைந்தவனே சித்தன்.

மனம் என்ற ஐம்புலனும் ஜட கருவிகள்..
சுவாதீனம் என்பது பரஸ்பர மருட்சி..
புத்தி.. மேம்பட்டதாயினும்.. ஜடப்பொருளே!
சித்தம்.. உறக்கத்திலும் விழித்திருந்து வழிநடத்தும் பேரறிவின் பாலம்.
Posted on by Hari

Sep 6, 2025

ஒப்பீட்டு வழுக்கள்

தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி..
அனுபவம் உணர்வுகள் சாதூரியம்..
சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல!

உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை..
அலட்சியம் அருவருப்பு நிந்தனை..
நிதமும் களைவதுவே மேம்பாடு.

நீ பலசாலி.. இவன் அறிவாளி.. அவள் கனிவானவள்..
என்பவை ஒப்பீட்டு வழுக்கள்.. நிதர்சனம் அல்ல!
உண்மை என்று உள்வாங்கினால்.. உழன்று கொண்டே இருப்பாய்.
Posted on by Hari

Sep 5, 2025

ஏதுமாய் இல்லாதிரு

வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு
நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு
சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு

விளைவு கருதாத் துணிவே துணிவு
தனதாற்றல் மறந்து பணியும் பணிவே பணிவு
தாக்குவதையும் காக்கும் கனிவே கனிவு
Posted on by Hari

Sep 3, 2025

பதவி

பசித்து புசி
தத்துவம் அசி
விழித்து வாசி
Posted on by Hari

Jul 4, 2025

messenger

I question myself so hard,
Thus, I'm not caught off-gaurd.

When i do, i know its the herald,
Sent by the divine lord.
Posted on by Hari

May 22, 2025

தகுந்தவை

வியக்கத் தகுந்தவை?
பேரழகு பேரறிவு பேராற்றல்

வாழ்த்தத் தகுந்தவை?
வேட்கை முயற்சி பணிவு

போற்றத் தகுந்தவை?
நல்லறம் நற்குணம் பரமஞானம்

வழங்கத் தகுந்தவை?
பிராணதானம் பிரணவதானம் ஞானதானம்


பிராணதானம் என்பது?
உயிர்க்கத்தால், உணவளித்தல், நலம் பேணல்

பிரணவதானம் என்றால்?
உணர்வூட்டல், ஊக்கமளித்தல், சூல்காத்தல்

ஞானதானம்?
கலை, வித்தை, மெய்ஞ்ஞானம் பயில்வித்தல்

Posted on by Hari

Apr 5, 2025

என்ன உறவு?

உனக்கும் எனக்கும் என்ன உறவு?
கல்லில் செதுக்குவதும்
கையொப்பம் இடுவதும்
முழுமை தந்ததா?

இப் பொழுது ஒரு உறவை நீட்டு!
அவ் உறவிற்கு உண்மையாய் இரு!
இடம் பொருள் ஏவலுக்கேட்ப,
உறவும் விரிந்து உருமாறட்டும்!

உன் தந்தையென கொள்!
அவையத்து முந்துவதே கடமையெனக் கொள்வேன்.
அறம் உணர்த்துவதும், ஆற்றல் பெருக்குவதும்
எனதன்பின் வெளிப்பாடு

சக உதிரன் என கொள்!
சேட்டைகள் செய்வதும், சினம் கொள்ள வைப்பதும்
எனது பிரத்தியேக உரிமை.
வேறொருவன் அழவைத்தால், அண்ணன் யாரென்று அறிவாய்!

தோழன் என கொள்!
விருப்புகள் பகிர்ந்து, வெறுப்புகள் களைவோம்
பல வருட பிரிவுகளும், ஒரு நொடியில் தகரும்.
நீ இல்லாத அறைகளிலும், உன்பக்கம் நிற்பேன்!

நண்பன் என கொள்!
உன் நம்பிக்கை காப்பது என் உடன்படிக்கை.
உன் உறவுகள் என் உறவுகள்
உன்னை எதிர்த்தேனும், உனைக் காப்பேன்.

கொண்டவனாய் கொண்டால்,
உன் உடமை உரிமையும் காப்பது
எனது சமரசமற்ற கடமை!
பயம் ஆசை ஏக்கம் தவிப்பு களைவேன்

மகனென கொள்!
கொண்ட பொழுதின் பெரிதுவக்கம்
சான்றோர் சபையில் உணர்வாய்!
பிறவிப்பயன் பூரிப்பை உணர்த்திச் செல்வேன்.

தாயாய் கருதிக்கொள்!
போஷித்து ஊட்டமளித்து வளர்ப்பேன்.
உனக்கு முன்பே உன் இடர்களை உணர்வேன்.
தெய்வத்தையும் ஏவி உனைக் காப்பேன்.

குருவெனக் கொண்டால்,
அனைத்துறவின் அத்துமீறலுக்கும் தயாராகிவிடு.
உன் அகம் புகுந்து, குறை களைவதும்,
பண்பாட்டை தகர்ப்பதும், எனக்கிடப்பட்ட கட்டளை!

எவ்வுறவும் நிரந்தரம் அல்ல!
இப்பிறப்பிலோ பிற்பிறப்பிலோ உருமாறி பரிணமிக்கும்.
நிகழ்கால உறவே நிதர்சனம்
அதிலிருந்து உதிரும் உணர்வே நிறைகுடம்.
Posted on by Hari