Feb 6, 2022

கயிறிழுப்பு போட்டி

ஈசனுக்கும் நீசனுக்கும் இடையே
கயிறிழுப்பு போட்டியில் சிக்கியவன் மனுசன்

சித்தம் சிவம் ஆனால் ஈசன்
செத்து சைவம் ஆனால் நீசன்

ஈசன் கயிற்றை இழுப்பதே இல்லை
நீசன் இழுப்போ ஓய்வதையே இல்லை

ஈசன் ஏன் இழுப்பதில்லை என்று கோவிக்கும் மழலையரே!
அது உன் தனிமனித சுதந்திரத்திற்கு அவன் தரும் மதிப்பு.

ஈசனின் இழுப்பை தாங்கும் சக்தியும் நமக்கில்லை!
எத்தருணத்திலும் அவன் கயிற்றை கைவிடுவதும் இல்லை.

நீசன் வென்றாலும் ஆட்டம் தொடரும்!
ஈசனிடமிருந்து வெகு தொலைவில், நீசனின் அடிமையாக!

நீசனின் இழுப்பை மீறி நீந்தினால் ஈசனை நெருங்கலாம்
நெருங்க நெருங்க நீசன் வலுவிழப்பான்

ஈசன் வென்றால் ஆட்டம் முடிந்தது!
ஏனெனில் நீயும் ஈசனாயிருப்பாய்!
Posted on by Hari

Feb 1, 2022

வழிபாடு

கண்ணீர் வழிய உருகி இசைந்து பாடுவதே.. உண்மையான வழிபாடு.

வழிபாடு மூன்று வகைப்படும்;

1.) தெய்வ வழிபாடு
சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு செல்வது, பூஜைகள் பல செய்து, நம்மை சுற்றி, நமக்கு வெளியே உள்ள ஆற்றல்களை போற்றி பாடுவது.

2.) கடவுள் வழிபாடு
கிரியை - இவ்வுடல் மனம் இயக்கத்தை ஆராய்ந்து, நம்முள் இயங்கும் ஆற்றலை வியந்து, தன்னை அறிந்து தெளிதல்.

3.) இறை வழிபாடு
யோகம் - இவ்வியக்கத்திற்கெல்லாம் மூல கர்த்தாவாகிய இறையை உணர்ந்தறிந்து, அதனோடு ஐக்கியமாகும் முயற்சி.

இதில் எதுவாயினும்; கண் கலங்காவிடில், தொண்டை வரண்டாவிடில் - வழிபாடு முழுமை பெறவில்லை. தொடர்ந்து முயற்சியுங்கள்.

இம்மூன்றில் ஏதேனும் ஒரு வழிபாட்டிற்கு வழி காட்டுபவர் குரு.

குருவிடம் செலுத்த வேண்டியது மதிப்பு, மரியாதை, நன்றி, நம்பிக்கை, விசுவாசம், சமர்ப்பணம். குரு வழிபாடு என்று மனிதரை வழிபடுவது மூடத்தனம். உண்மை குரு ஒருநாளும் இதற்க்கு இடம் கொடுக்க மாட்டார்.
Posted on by Hari