Dec 19, 2022

என் முதல் தோழி

நான் ரசித்த முதல் முகம் நீ
என் முதல் தோழி நீ

நான் கட்டிய செங்கல் வீடு உன்னோடு
நீ சமைத்த மண்ணுனவு என்னோடு

சீப்பால் பாதம் வருடி விளையாடி மகிழ்ந்தோம்
ஆறு குளங்களில் குதித்தாடி குளித்தோம்

பாண்டி தாயம் கல்லாங்கா பயில்வித்தாய்
சிட்னி ஷெல்டன் ராபர்ட் கியோசாகியும் பரிட்சயம் செய்தாய்

உள்முக சிந்தையுடன் உம்மென்று நான்
உற்சாக கலகலப்பில் சகவாசப்பிரியை நீ

வேறு யாரும் காணாத என்னை கண்டவள் நீ
உன் உக்கிரத்தின் தாக்கம் உணர்ந்தவன் நான்

என் நண்பர்களை அதட்டி மிரட்டுவாய்
உன் தோழிகளும் என் தமக்கையர்

உன் திருமணத்தில் நான் கலங்கினேன்
என் புறப்பாட்டில் நீ கதறினாய்

என் மகளாய் மீண்டும் பிறந்தாய்
உன் மகனாய் எனையும் ஈன்றாய்

நீ வளர்த்த முதல் மகன் நான்
என் பிரத்யேக யசோதை நீ
Posted on by Hari

Dec 16, 2022

மழலை மகனின் கற்பிப்பு

சனி புதன் விடியல் பொழுதில்
எள்ளெண்ணை தேய்த்து
108 வர்மா புள்ளிகளையும் இயக்கி
சியக்காய் கடலைமாவு தேய்த்து
இரண்டு வாளி கொதிக்கும் நீரில் நீராட்டிட..

அவன் சக்திக்கு இயன்றவரை தனது பிஞ்சு கைகளால் தடுத்தும் மழலை கூவல் கூவியும் விலகி ஓட போராடுவான். கண்களில் கண் வைத்து கெஞ்சியும் பார்ப்பான். அனைத்தும் முடிந்து வெளியேறி தலை துவட்டிட கட்டி அணைத்து கொஞ்சிடுவான்.

பாடம் 1: அவன் வெறுப்பது அந்நிகழ்வை மட்டுமே. நிகழ்த்துபவரை அல்ல


தொலைக்காட்சியை எவ்வளவு வியந்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தாலும்,
அலைவரிசையை மாற்றினால் சிறிதும் சிணுங்காமல் புது நிகழ்ச்சியை அங்ஙனமே ரசித்து பார்க்கிறான்.
கோவம் இல்லை அடம் இல்லை.
காரணம் அவன் பார்ப்பதன் மீது அவனுக்கு பற்றே இல்லை.

பாடம் 2: நமது ஒவ்வொரு கோவத்தின் எழுச்சிக்கு பின்னிருப்பது, நாம் பற்றி நிற்கும் பற்றே

நிகழ்வை, நிகழ்த்துபவரை, சந்தர்ப்பத்தையும் கோள்சூட்டி நமது பற்றையும் சுயமதிப்பையும் தக்கவைத்து கொள்கிறோம். பிஞ்சு மழலைக்கு அவ்வளவு தந்திரம் தெரிவதில்லை.
Posted on by Hari