Dec 19, 2022

என் முதல் தோழி

நான் ரசித்த முதல் முகம் நீ
என் முதல் தோழி நீ

நான் கட்டிய செங்கல் வீடு உன்னோடு
நீ சமைத்த மண்ணுனவு என்னோடு

சீப்பால் பாதம் வருடி விளையாடி மகிழ்ந்தோம்
ஆறு குளங்களில் குதித்தாடி குளித்தோம்

பாண்டி தாயம் கல்லாங்கா பயில்வித்தாய்
சிட்னி ஷெல்டன் ராபர்ட் கியோசாகியும் பரிட்சயம் செய்தாய்

உள்முக சிந்தையுடன் உம்மென்று நான்
உற்சாக கலகலப்பில் சகவாசப்பிரியை நீ

வேறு யாரும் காணாத என்னை கண்டவள் நீ
உன் உக்கிரத்தின் தாக்கம் உணர்ந்தவன் நான்

என் நண்பர்களை அதட்டி மிரட்டுவாய்
உன் தோழிகளும் என் தமக்கையர்

உன் திருமணத்தில் நான் கலங்கினேன்
என் புறப்பாட்டில் நீ கதறினாய்

என் மகளாய் மீண்டும் பிறந்தாய்
உன் மகனாய் எனையும் ஈன்றாய்

நீ வளர்த்த முதல் மகன் நான்
என் பிரத்யேக யசோதை நீ
Posted on by Hari

Dec 16, 2022

மழலை மகனின் கற்பிப்பு

சனி புதன் விடியல் பொழுதில்
எள்ளெண்ணை தேய்த்து
108 வர்மா புள்ளிகளையும் இயக்கி
சியக்காய் கடலைமாவு தேய்த்து
இரண்டு வாளி கொதிக்கும் நீரில் நீராட்டிட..

அவன் சக்திக்கு இயன்றவரை தனது பிஞ்சு கைகளால் தடுத்தும் மழலை கூவல் கூவியும் விலகி ஓட போராடுவான். கண்களில் கண் வைத்து கெஞ்சியும் பார்ப்பான். அனைத்தும் முடிந்து வெளியேறி தலை துவட்டிட கட்டி அணைத்து கொஞ்சிடுவான்.

பாடம் 1: அவன் வெறுப்பது அந்நிகழ்வை மட்டுமே. நிகழ்த்துபவரை அல்ல


தொலைக்காட்சியை எவ்வளவு வியந்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தாலும்,
அலைவரிசையை மாற்றினால் சிறிதும் சிணுங்காமல் புது நிகழ்ச்சியை அங்ஙனமே ரசித்து பார்க்கிறான்.
கோவம் இல்லை அடம் இல்லை.
காரணம் அவன் பார்ப்பதன் மீது அவனுக்கு பற்றே இல்லை.

பாடம் 2: நமது ஒவ்வொரு கோவத்தின் எழுச்சிக்கு பின்னிருப்பது, நாம் பற்றி நிற்கும் பற்றே

நிகழ்வை, நிகழ்த்துபவரை, சந்தர்ப்பத்தையும் கோள்சூட்டி நமது பற்றையும் சுயமதிப்பையும் தக்கவைத்து கொள்கிறோம். பிஞ்சு மழலைக்கு அவ்வளவு தந்திரம் தெரிவதில்லை.
Posted on by Hari

Jun 16, 2022

நிலையற்றவற்றில் நாட்டம்.. நிலையான வாழ்வா?

நிலையற்றவற்றில் நாட்டம் வைத்து
நிலையாக வாழ நினைக்கும் மாக்களே

ஒரு நொடியில் தலைகீழாக மாறக்கூடிய அழகு செல்வம் புகழ்
மீது நாட்டம் ஒரே நொடியில் மறக்கடிக்கும்

திறமை ஆற்றல் அறிவு நாட்டம் கொண்டோர்
பல வருடங்கள் நினைவில் வாழ்வர்

சமூக சீர்பாட்டில் நாட்டம் கொண்டோர்
தசாப்தங்கள் நினைவில் நிற்பார்

மனிதகுலம் இயற்க்கை மேம்பாட்டில் நாட்டம்
நூற்றாண்டுகள் போற்றப்படுவர்

இறையடி பற்றி அவன்சரண் புகுந்தோர்
பொற்காலம் மக்களால் வணங்கப்படுவர்

மெய்ஞ்ஞானம் ஊற்றினால் இயற்கையின் இயக்கத்தில் நாட்டம் கொண்டோர்
மரணமில்லா பெருவாழ்வு என்ற நிலையான வாழ்வை பெறுவர்
Posted on by Hari

May 23, 2022

இருள்..அருள்

இருள் பொறுக்க மருள் தந்தான்
மருள் நீக்கின் தெருள் தருவான்
தெருள் கொண்டு அருள் செய்க!
Posted on by Hari

May 19, 2022

விளைநிலம் நீர் எரிபொருள் மின்சாரம்

இயற்கையை கசக்கி பிழிந்தெடுக்கும் சாறு,
விளைநிலம் நீர் எரிபொருள் மின்சாரம்.

அத்யாவசியம் ஆடம்பரம் கேளிக்கை 
என பயன்பாடு எதுவாயினும்,
இயற்க்கை அன்னையின் உதிரம் 
உறிஞ்சும் அட்டை பூச்சிகள் நாம்.

தேவையின் தெளிவின்றி மிஞ்சி பயன்படுத்தும்போது,
குருதி ருசி ரசித்து சுகிக்கும் அரக்கனாகிறோம். 
வீணாவதை நிறுத்த சிந்தை சாய்க்காதவன்
அன்னையின் துகிலுரிப்பை அலட்சிய படுத்தும் ஈனப்பிறவி.
Posted on by Hari

Apr 5, 2022

உன் விருப்பும் வெறுப்பும் உன் மீது மட்டுமே!

உன் விருப்பம் உன் மீது மட்டுமே!
"அவரை எனக்கு பிடிக்கும்" என்பது மேலோட்ட கருத்து.
அதன் பின் ஒளிந்திருக்கும் உண்மை யாதெனின்,
உன் விருப்பு அவர் பார்வையில் உள்ள நீ
உன்னை பற்றி அவரது அபிப்ராயம்,
உனது சுய கருத்தை விட அது நன்றாக உள்ளது.

உன் வெறுப்பும் உன்மீது மட்டுமே!
நீ ஏற்க மறுக்கும் மனிதரின் பார்வையில் உள்ள நீ!
உனது பலவீனங்களை எட்டி பார்க்கும் அவரது பார்வை,
நீ அசைபோட மறுக்கும் உன் குறைகளை அம்பலமாக்கியது.
அதை தவிர்த்து தன்மானத்தை தக்கவைக்க
போராடும் மற்றொரு முயற்சியே உனது வெறுப்பு

உன் விருப்பும் வெறுப்பும் உன் மீது மட்டுமே!
Posted on by Hari

Feb 6, 2022

கயிறிழுப்பு போட்டி

ஈசனுக்கும் நீசனுக்கும் இடையே
கயிறிழுப்பு போட்டியில் சிக்கியவன் மனுசன்

சித்தம் சிவம் ஆனால் ஈசன்
செத்து சைவம் ஆனால் நீசன்

ஈசன் கயிற்றை இழுப்பதே இல்லை
நீசன் இழுப்போ ஓய்வதையே இல்லை

ஈசன் ஏன் இழுப்பதில்லை என்று கோவிக்கும் மழலையரே!
அது உன் தனிமனித சுதந்திரத்திற்கு அவன் தரும் மதிப்பு.

ஈசனின் இழுப்பை தாங்கும் சக்தியும் நமக்கில்லை!
எத்தருணத்திலும் அவன் கயிற்றை கைவிடுவதும் இல்லை.

நீசன் வென்றாலும் ஆட்டம் தொடரும்!
ஈசனிடமிருந்து வெகு தொலைவில், நீசனின் அடிமையாக!

நீசனின் இழுப்பை மீறி நீந்தினால் ஈசனை நெருங்கலாம்
நெருங்க நெருங்க நீசன் வலுவிழப்பான்

ஈசன் வென்றால் ஆட்டம் முடிந்தது!
ஏனெனில் நீயும் ஈசனாயிருப்பாய்!
Posted on by Hari

Feb 1, 2022

வழிபாடு

கண்ணீர் வழிய உருகி இசைந்து பாடுவதே.. உண்மையான வழிபாடு.

வழிபாடு மூன்று வகைப்படும்;

1.) தெய்வ வழிபாடு
சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு செல்வது, பூஜைகள் பல செய்து, நம்மை சுற்றி, நமக்கு வெளியே உள்ள ஆற்றல்களை போற்றி பாடுவது.

2.) கடவுள் வழிபாடு
கிரியை - இவ்வுடல் மனம் இயக்கத்தை ஆராய்ந்து, நம்முள் இயங்கும் ஆற்றலை வியந்து, தன்னை அறிந்து தெளிதல்.

3.) இறை வழிபாடு
யோகம் - இவ்வியக்கத்திற்கெல்லாம் மூல கர்த்தாவாகிய இறையை உணர்ந்தறிந்து, அதனோடு ஐக்கியமாகும் முயற்சி.

இதில் எதுவாயினும்; கண் கலங்காவிடில், தொண்டை வரண்டாவிடில் - வழிபாடு முழுமை பெறவில்லை. தொடர்ந்து முயற்சியுங்கள்.

இம்மூன்றில் ஏதேனும் ஒரு வழிபாட்டிற்கு வழி காட்டுபவர் குரு.

குருவிடம் செலுத்த வேண்டியது மதிப்பு, மரியாதை, நன்றி, நம்பிக்கை, விசுவாசம், சமர்ப்பணம். குரு வழிபாடு என்று மனிதரை வழிபடுவது மூடத்தனம். உண்மை குரு ஒருநாளும் இதற்க்கு இடம் கொடுக்க மாட்டார்.
Posted on by Hari

Jan 30, 2022

அறம், பொருள், இன்பம்

நிகழ்கால சுகானுபவம் இன்பம்
இறந்தகால பாடம் புரிந்து வாழ்வின் பாதை அமைத்தல் பொருள்
பல பிறவிகள் கற்ற பாடம் சித்தத்திலிருந்து வழி நடத்துவது அறம்
இம்மூன்றும் முழுமை பெற்று பற்றறுத்து இறையடி சேர்வதே வீடு

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்
என வியாசர் விளக்கியதும்
அறம், பொருள், இன்பம், வீடு
என்று வள்ளுவர் உரைத்ததும் ஒன்றே
Posted on by Hari